தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகள் பயன்படுத்த பிரிட்டனில் தடை
செக்ஸ் ஊக்க மாத்திரையான “வயாக்ரா’ போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த செக்ஸ் ஊக்க மாத்திரைகளின் விற்பனை பிரிட்டனில் சக்கை போடு போடுகிறது. இவற்றை உட்கொண்டால் விரைவில் மரணம் தான் என்றும், அந்த மாத்திரைகளை வாங்கியுள்ளவர்கள் அவற்றை உடனடியாக குப்பையில் போட்டு விட வேண்டும் என்றும் பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இவ்வகை மாத்திரைகள் பிரிட்டனில் ஆசியர்களால் நடத்தப்படும் கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே மருந்து கடைகளில் “வயாக்ரா’ மாத்திரை அளிக்கப்படும். அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்து கடைகளில் தான் இது கிடைக்கும். ஆனால், “விகோரா’, “ப்ராக்சிரான்’, “காமாக்ரா’ போன்ற தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகளில் பிரிட்டனில் உள்ள பழக்கடைகளில் கூட கிடைக்கின்றன. கல்லீரல் பாதிப்பு, இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இந்த தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டால், விரைவில் மரணம் நிச்சயம் என பிரிட்டன் சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு லண்டன் பகுதியில் அரசு மருந்து பிரிவின் ஆலோசகராக செயல்பட்டு வரும் சங்கீதா சர்மா என்பவர் கூறுகையில், ” இந்த மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்ய லைசென்ஸ் இல்லை. பிரிட்டனில் இதை “கொலைக்கார மாத்திரைகள்’ என அழைக்கின்றனர்.
பிரிட்டன் தரம் பிரிவில் இந்த மாத்திரைகள் சோதிக்கப்படவில்லை. சவுத் ஹால் என்ற பகுதியில் ஆயிரத்து 600 மாத்திரைகளும், இயாலிங் என்ற பகுதியில் 2 ஆயிரம் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.