பெங்களூர் கப்பன் பூங்காவில் 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்: பாதுகாவலர்கள் வெறிச்செயல்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், கப்பன் பூங்காவில் 30 வயதுமிக்க பெண் பாதுகாவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கப்பன் பூங்கா அருகில் டென்னிஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த டென்னிஸ் கிளப்பில் உறுப்பினர் ஆவதற்காக நேற்று மாலை 30 வயது மிக்க பெண் ஒருவர் சென்றுள்ளார். கிளப்பின் நேரம் முடிவடைந்ததால் அந்த பெண்ணை மறுநாள் வரும்படி கிளப் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அந்த பெண் வந்திருந்ததால், இரவு கிளப்பிற்கு அருகில் தங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அருகில் உள்ள கப்பன் பூங்காவிற்கு சென்ற அந்த பெண் இரவு 9.30 மணி வரை அங்கு இருந்துள்ளார்.
பின்னர் பூங்காவில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம், பூங்காவின் காவலர்கள் இருவர் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, பூங்காவில் இருந்து வெளியே செல்வதற்கு அந்தப் பெண் வழி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவலர்கள் இருவரும் அந்த பெண்ணை, வழி காட்டுவதாக கூறி மரங்கள் அடர்ந்த இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் நள்ளிரவு 2 மணிக்கு கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பெங்களூரூ கப்பன் பூங்காவின் காவலர்கள் இருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கப்பன் பூங்கா போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இரு காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடந்த மூன்றாவது பாலியல் பலாத்கார சம்பவம் இது. முன்னதாக, 22 வயது மிக்க கால்சென்டர் பெண் ஊழியர் ஒருவர் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating