திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர் மழை: சுவர் இடிந்து பெண் சாவு…!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). இவர் தனது மகள் கலியம்மாள் (45), பேரன் ராமச்சந்திரன், பேத்தி காயத்ரியுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
நேற்று இவர்கள் 4 பேரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் சமீப நாட்களாக பெய்த தொடர் மழையால் இன்று அதிகாலை 5 மணி அளவில் அந்த வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
அதன் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி குப்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார். கலியம்மாள், ராமச்சந்திரன், காயத்ரி ஆகியோர் சுவர் இடிந்த சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து தப்பியோடிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி குப்பாயி உடலை மீட்டனர். அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் பற்றி அறிந்த வருவாய்துறை அதிகாரிகள் கீரிமேடு கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
நேற்று முன்தினம் இரவு திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தில் மழையால் ஏற்படட குளிருக்கு வீரம்மாள் (85) என்ற மூதாட்டி பலியானது குறிப்பிடத்தக்கது.
Average Rating