முஷரப்புக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்க தடை நீங்கியது
பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிரான வழக்குகளில் கடைசியாக எஞ்சி இருந்ததும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இருந்த தடை நீங்கியது. பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிபர் முஷரப் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன. இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டதை எதிர்த்து 6 வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன. ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் அதில் இருந்தபடி இந்த தேர்தலில் போட்டியிட்டது செல்லாது என்று கூறித்தான் இந்த வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட சுப்ரீம் கோர்ட்டுதேர்தல் முடிவை அறிவிப்பதற்கு தடை விதித்தது. இந்த நிலையில் முஷரப் நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்து அவர்களை வீட்டுக்காவலில் அடைத்தார். சுப்ரீம் கோர்ட்டுக்கு தனக்கு ஆதரவான நீதிபதிகளை அவர் நியமித்தார். புதிய நீதிபதிகள் முஷரப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து 5 வழக்குகளை தள்ளுபடி செய்தனர். கடைசியாக ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அப்துல் ஹமீது டோகர் தலைமையில் 10 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. இந்த நீதிபதிகள் குழு இந்த வழக்கையும் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் முஷரப் 2-ம் முறையாக பதவி ஏற்பதற்கு இருந்த தடை நீங்கியது.
சனிக்கிழமை பதவி ஏற்கலாம்
கோர்ட்டு தீர்ப்பு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வெளியானால் முஷரப் சனிக்கிழமை பதவி ஏற்கலாம் என்று அரசாங்க வக்கீலும், முஷரப் சார்பில் கோர்ட்டில் ஆஜரானவருமான மாலிக் கய்ïம் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையில் முஷரப் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததற்கு இந்த வழக்குகளில் இப்திகார் சவுத்ரி தனக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்று முஷரப் அஞ்சியதே காரணம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.