கொண்டித்தோப்பில் மனைவியை விஷம் கொடுத்து கொன்ற தீயணைப்பு வீரர் தப்பி ஓட்டம்…!!
கொண்டித்தோப்பு தீயணைப்பு காவலர் குடியிருப்பு ஏ பிளாக் 2–வது மாடியில் குடியிருந்து வருபவர் செந்தில் குமார் (31). இவர் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி (எ) சரண்யா (27). இந்த தம்பதிக்கு சிவானி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது.
நேற்று செந்தில் குமாருக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பணிக்கு செல்லவில்லை. இதனால் இன்று காலையில் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து செந்தில்குமார் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.
அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தீயணைப்பு துறையினர் நேராக செந்தில் குமார் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது செந்தில்குமார் இரவில் வீட்டில் இருந்ததாக தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் முத்து லட்சுமியின் அண்ணன் சக்தி வேலுக்கு போன் செய்து வரவழைத்தனர். பின்னர் ஏழுகிணறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
எல்லோரும் செந்தில் குமார் வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது. வீட்டின் படுக்கை அறையில் முத்து லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்.
உடனே ஏழுகிணறு போலீசார் முத்து லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
செந்தில்குமார் குடும்ப சண்டையில் முத்து லட்சுமியின் வாயில் விஷத்தை ஊற்றி கொன்றாரா? அல்லது கழுத்தை நெரித்து கொன்றாரா என விசாரித்து வருகிறார்கள். குழந்தை சிவானியுடன் தப்பியோடிய செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பின்தான் முத்து லட்சுமி எவ்வாறு இறந்தார் என்பது தெரிய வரும்.
Average Rating