நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)…!!
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வந்துள்ளனர்.
படகில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அகதிகள் கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால், ரோந்து கப்பலில் இருந்த ஒரு அதிகாரியின் செயல் அகதிகளை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோந்து கப்பலுக்கு அருகில் படகு வந்தவுடன், அதிலிருந்த அதிகாரி ஒருவர் நீண்ட கம்பு ஒன்றை எடுத்து கீழே உள்ள படகை நோக்கி செலுத்தி அதனை மூழ்கடிக்க முயற்சித்துள்ளார்.
அதிகாரியின் செயலை கண்டு அதிர்ச்சியுற்ற அகதிகள் தங்களை காப்பாற்றுமாறு அலறியுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த துருக்கி நாட்டு கடலோர காவல் படையினர், இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துவிட்டு உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அகதிகளிடம் இரக்கமின்றி செயல்பட்ட கிரேக்க அதிகாரிகளின் நடவடிக்கை தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதனை கிரேக்க கடலோர காவல் படை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா நாட்டு அகதிகளை கிரேக்கம் மற்றும் துருக்கி நாடுகளின் வீரர்கள் காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபட்டனர்.
ஆனால், வீடியோவாக வெளியாகியுள்ள அந்த காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன என்றும் அதனை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating