பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல்: 1200 இடங்களில் சோதனை – 165 பேர் கைது…!!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி நள்ளிரவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இத்தாக்குதலுக்கு அப்துல் ஹமீது அயிவுத் (27) என்ற பெல்ஜியம் தீவிரவாதி மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவன் பாரீசில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
எனவே, அதை சுற்றி வளைத்த போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி அபாவுத் உள்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
எனவே பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் 1200 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 165 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஷானுவே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் ஜாவத் பென்டாவுத் (29). இவர் செயின்ட் டேனிஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ஹமீத் அபாவுத் உள்ளிட்டோர் தங்க அடைக்கலம் கொடுத்தார். அங்கு சோதனை நடத்திய போலீசார் 3 பேரை சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தாக கைது செய்யப்பட்ட அவர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
Average Rating