ஹீரோவாகிவிட்ட செந்தில்! -கவுண்டர் ஆசிர்வாதம்
எந்த ஹீரோவிடம் போனாலும் இரண்டு வருடத்திற்கு கால்ஷீட் இல்லை என்று கையை விரிக்கிற நிலைமை. விஜயிடம் போனாலும் இதேதான். விக்ராந்திடம் போனாலும் இதேதான். பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர்கள், வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு, போன்ற காமெடியர்களை ஹீரோவாக்கி கலெக்ஷனுக்கு வழி செய்துவிட்டார்கள். அந்த வரிசையில் செந்திலும் பல வருடங்கள் கழித்து மேக்கப் பாக்சை திறந்திருக்கிறார். ஆதிவாசியும், அதிசய பேசியும் என்பதுதான் செந்தில் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்தின் பெயர். தென் ஆப்பிரிக்கா, மலேசியா காடுகளில் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக இருந்த மாலன் என்பவர் இயக்குகிறார். என் சிஷ்யர்கள் எல்லாரும் இயக்குனர்கள் ஆகிவிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சு.கி! என்னை பார்த்தா ஆதிவாசி மாதிரியே இருக்கறதால இந்த படத்திலே என்னை ஹீரோவாக்கிட்டாங்க போல இருக்கு. இந்த படத்தின் கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்னப்பவே தெரிஞ்சு போச்சு இது ஒரு வெற்றிப்படம் என்று! செந்திலின் முகத்தில் தாண்டவமாடுகிறது வெற்றி பெருமிதம். கவுண்டர்கிட்ட ஆசி வாங்கிட்டீங்களா என்று கேட்க தோன்றியது. சில நல்ல நேரங்களில் நமது கேள்வியே பூஜை நேரத்து கரடியாகும் அபாயம் இருப்பதால், கப்சிப்! ஆனாலும், விசாரித்து பார்த்த வகையில், இவனுக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று கவுண்டர் ஆசிர்வதித்து விட்டதாக கேள்வி. கவுண்டர்.