ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து: விசைத்தறி அதிபர் உள்பட 5 பேர் பலி..!!
தேனியில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் மதுரை புறப்பட்டு சென்றது. ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் வந்தபோது டி.சுப்புலாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் எதிரே வந்த வாகனம் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டது. ஆட்டோ பஸ்சுக்கு அடியில் சிக்கி நசுங்கியதால் அதிலிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதைந்து பலியானார்கள்.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி குலாம், இன்ஸ்பெக்டர் நல்லு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆட்டோவின் உடைத்த பாகங்களுக்குள் சிக்கி இருந்ததால் போராடி மீட்டனர்.
அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் ஜக்கம்பட்டியை சேர்ந்த விசைத்தறி அதிபர் மீனாட்சிசுந்தரம் (வயது35), டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த வேலுத்தாய்(40), உசிலம்பட்டி விஜயா(55), கொண்டமநாயக்கன்பட்டி மாரியம்மாள், ஆட்டோ டிரைவர் சிலுக்குவார்பட்டி முரளிதரன்(27) என்று தெரியவந்தது.
விசைத்தறி அதிபர் மீனாட்சிசுந்தரம் நெய்த துணிகளை டி.சுப்புலாபுரத்தில் விற்பனை செய்துவிட்டு அந்த ஆட்டோவில் திரும்பியுள்ளார். மற்ற 3 பெண்களும் கூலி வேலைக்கு சென்றவர்கள்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் வந்து விசாரணை நடத்தினார். பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த தர்மராஜ்(55) கைது செய்யப்பட்டார். 5 பேர் பலியான சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating