செய்யாறு, வந்தவாசியில் பலத்த மழை: வீடு இடிந்து, மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் சாவு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. செய்யாறு வந்தவாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆரணி வேலூர் பகுதியில் பரவலாக மழையும் மற்ற இடங்களில் சாரல் மழையும் பெய்தது.
பலத்த மழையில் செய்யாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செய்யாறு டவுன் பகுதியில் தெருக்களில் மழை வெள்ளம் தேங்கியது. நேற்று விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் நீடித்தது.
செய்யாறு டவுன் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் சந்தானம் (வயது 28) கம்பி கட்டும் தொழிலாளி. இவரது வீட்டு மாடியில் நேற்று மழைநீர் தேங்கியது. இதனால் சந்தானம் மாடிக்கு சென்று தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டு மாடி அருகே சென்ற மின் ஒயர் அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சந்தானம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செய்யாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செய்யாறு அருகே உள்ள முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (30) நேற்று மாலை வீட்டில் அமர்ந்திருந்தார். பலத்த மழை பெய்தபோது வீட்டில் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கிய கண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.
செய்யாறு தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
திருவண்ணாமலை– 2.6, செங்கம் –16.2, போளூர் 16.2., தண்டராம்பட்டு – 2.6, ஆரணி – 18.4, செய்யாறு – 89.5, வந்தவாசி –46
Average Rating