குடாநாட்டில் நடைபெற்ற மோதல்களையடுத்து இராணுவத் தளபதி அவசர விஜயம்
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம்காலை முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதலையடுத்தே இராணுவத் தளபதி யாழ்.குடாநாட்டுக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள பாதுகாப்பு சூழ்நிலையையடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா இந்த அவசர விஜயத்தை மேற்கொண்டார். முகமாலையில் நேற்று முன்தினம் காலை படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சியொன்றை பலத்த பதில் தாக்குதல் மூலம் தாங்கள் முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். எனினும், முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தாங்கள் முறியடித்ததாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை வரவேற்ற யாழ்.மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி குடாநாட்டு நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்துள்ளார். குடாநாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி சிரேஷ்ட கட்டளைத் தளபதிகளுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.