திடீர் வாந்தி, மயக்கம்
திருத்தணி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் கேண்டீனில் பல்லி விழுந்த சாம்பார் உணவை உட்கொண்ட 220 தொழிலாளர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணியை அடுத்த சரஸ்வதி நகரில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இங்கு திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம் ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 1650 மேற்பட்டோர் 3 ஷிப்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள். தொடங்கிய ஷிப்ட்டில் சுமார் 504 பேர் வேலை பார்த்தனராம். இவர்களில் சுமார் 300 பேர் தொழிற்சாலையிலுள்ள கேண்டீனில் இரவு உணவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அனைவரும் பணியில் இருந்தபோது 10 தொழிலாளர்கள் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து, தொழிற்சாலை உயர் அதிகாரி ஒருவர் கேண்டீக்கு சென்று அனைவரும் சாப்பிட்ட உணவை பரிசோதித்ததில் சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்ததாம். உடனடியாக இரவு உணவு சாப்பிட்ட அனைவரையும் திருத்தணி மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்ள சுமார் 100 தொழிலாளர்களுக்கு தலைமை மருத்துவர் அண்ணாமலை மற்றும் டாக்டர்கள் மோகன், ஸ்ரீதேவி, பிரபாகரன் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 120 பேரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் 100 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 220 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவர்களின் உறவினர்கள் அரக்கோணம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை முன்பு நேற்றிரவு திரளாக கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.