குண்டு வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு! மூன்று சிறு குழந்தைகளும் படுகாயம்
நுகேகொட சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி நுகேகொட சந்தியில் உள்ள “நோ லிமிட்” விற்பனை நிலையத்தில் பொதிகளை வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான பொதியொன்று வெடித்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை சோதனையிட முயன்றபோதே குண்டு வெடித்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு களுபோவளை ஆஸ்பத்திரியில் இப்போது 18 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 9 ஆண்களுடையதெனவும் 9 பெண்களுடையதெனவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. 38 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுத்தாக்குதலில் 3 சிறு குழந்தைகளும் காயமடைந்துள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.