கைதுகள் மூலம் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தாதீர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்
கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழ் மக்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் , கடவுச்சீட்டுகள், பொலிஸ் பதிவுகள், கிராமசேவையாளரின் சான்றிதழ், தொழில் செய்வதற்கான சான்றிதழ் போன்றவற்றை காண்பித்தும் அவற்றையும் பொருட்படுத்தாமல் தமிழர் என்ற காரணத்தால் வகை தொகையின்றி பொலிஸாராலும் ஆயுதப் படையினராலும் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என்ற பாகுபாடுகள் இன்றி கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றனர். கைதான பின்னர் எங்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்பது தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், கைதானவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியழுகின்றனர். கைதானவர்களைத் தேடி அலைகின்றனர். அவலமும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
தமிழ் மக்கள் இந்த நாட்டு மக்கள். இந்த நாட்டின் ஜனாதிபதியிடமும் அரசிடமும் இக்கைதுகள் குறித்து முறையிட்டும் எதுவித பயனுமில்லை.
இருப்பினும், ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் கண் மூடிக்கொண்டிருக்காமல் கைது செய்யப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களை உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்பவுள்ளோம். ஏனைய தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம்.
இத்தகைய இனவாத அடிப்படையிலான கைதுகள் மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாக இலங்கையில் தொடர்கின்றது. குறிப்பாக சர்வதேச சமூகம் நேரடியாக இதில் தலையிட்டு மனித உரிமைகளையேனும் நிலைநாட்ட வேண்டும் என வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.