வாடிப்பட்டி அருகே 52 கிலோ வெள்ளி கொள்ளை: சுங்கத்துறை அதிகாரி உள்பட 9 பேர் கைது…!!
சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56). வெள்ளி வியாபாரியான இவர், மதுரையில் உள்ள நகைக்கடைகளில் மொத்தமாக பழைய வெள்ளிகளை வாங்கிக்கொண்டு கொலுசு, வளையல், மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை புதிதாக செய்து கொடுப்பது வழக்கம்.
அதேபோல் கடந்த நவம்பர் 24–ந்தேதி கோவிந்தராஜ், அவரது மகன் மோகன்ராஜ் (26), ஊழியர் மணி (55), டிரைவர் தேவராஜ் (59) ஆகியோர் மதுரைக்கு வந்தனர்.
மதுரையில் சுமார் 52 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மாலை 4 மணி அளவில் காரில் சேலம் புறப்பட்டனர். வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் வந்தபோது, அதன் பின்னால் வந்த சுமோ காரில் வந்தவர்கள், கோவிந்தராஜ் வந்த காரை வழிமறித்து நிறுத்தினார்கள்.
சுமோ காரில் இருந்து 45–50 வயது மதிக்கத்தக்க 4 மர்ம நபர்கள் இறங்கி வந்து, நாங்கள் போலீசார், உங்கள் காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அதன்பின் காரை கடத்திச் சென்று அலங்காநல்லூரை அடுத்த மாலைப்பட்டி என்ற இடத்தில் கோவிந்தராஜ், அவரது மகன் மோகன்ராஜ், ஊழியர் தேவராஜ் ஆகியோரை இறக்கி விட்டு காரில் இருந்த 52 கிலோ வெள்ளி பொருட்களுடன் சுமோ காரில் தப்பி விட்டனர்.
இது சம்பந்தமாக கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஏட்டுகள் திருநாவுக்கரசு, பெரிய கருப்பன் ஆகியோர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பந்தமாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொள்ளை சம்பந்தமாக தனிப்படை போலீசார் திருச்சியை சேர்ந்த மோகன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது திருச்சி சுங்கத்துறை சப்–இன்ஸ்பெக்டர் டேவிட் சகாயம், திருச்சியை சேர்ந்த செந்தில்குமார், சத்தியராஜ், இன்னொரு செந்தில்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சுரேந்திரன், சேக் மைதீன், சிவாஜி உள்ளிட்ட 9 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
9 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 35 கிலோ வெள்ளியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 9 பேரையும் தனிப்படை போலீசார் மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating