கூடுவாஞ்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி: 2 தம்பதிகள் தப்பி ஓட்டம்…!!
காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கரின் மனைவி விமலா மற்றும் பெண்கள் கூடுவாஞ்சேரி போலீசில் ஏலச்சீட்டு மோசடி பற்றி புகார் கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
நான் வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகின்றேன். நானும் ஏலச்சீட்டும் நடத்தி வருகிறேன். என்னுடன் 200–க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடேசன் நகரில் குடியிருந்து வரும் புவனேஸ்வரி என்பவர் கடந்த 4 வருடங்களாக எங்களுடன் வேலை செய்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக புவனேஸ்வரியும், அவரது கணவர் அர்ஜுனனும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். 2015ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டு சீட்டு அவர்களிடம் கட்டினேன். கணவன்–மனைவி இருவரும் என்னிடம் ரூ.4 லட்சம் ஏலச்சீட்டு பணம் எடுத்தனர்.
இதுபோல் என்னுடன் கம்பெனியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் தீபாவளி சீட்டுக்காக பணம் கட்டினர். இதில் ரூ.60லட்சம் வரை பணத்தை வாங்கி சென்ற கணவன், மனைவி இருவரும் தீபாவளி பண்டும், ஏலச்சீட்டு பணமும் தராமல் ஏமாற்றிவிட்டனர்.
இதுபற்றி அர்ஜுனனிடம் கேட்டபோது, புவனேஸ்வரிக்கு பைத்தியம் பிடித்து விட்டது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். ஒரு மாதம் கழித்து தீபாவளி பண்டும், ஏலச்சீட்டின் பணமும் தருகிறேன் என்று கூறினார். இந்நிலையில், இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதேபோல் புவனேஸ்வரியின் தங்கை தீபாவும், அவரது கணவர் வெங்கடேசன் என்பவரும் தாம்பரம் பகுதியில் 300க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் வரை மோசடி செய்துவிட்டனர். அவர்கள் பெருமாட்டுநல்லூருக்கு செல்லும் மெயின்ரோட்டில் கடைகள் வாடகை எடுத்து மளிகை கடை, டெய்லர் கடை, எண்ணை கடை வைத்துள்ளனர்.
தற்போது கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் திரண்டு சென்று அவர்கள் குடியிருக்கும் வீடுகளை முற்றுகையிட்ட போது அவர்களும் தலைமறைவாகி விட்டனர். இதில் லட்சக்கணக்கில் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
நாங்கள் ஒவ்வொருவரும் 30க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டுக்கு பணம் வசூலித்து கட்டியுள்ளோம். இந்நிலையில், கணவன், மனைவியுடன் அவரது உறவினர்களும் கூண்டோடு தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் எங்களை நம்பி தீபாவளி சீட்டு கட்டியவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். எங்களால் நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ, வேலைக்கு செல்லவோ முடியவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவளி பண்டு, சீட்டு நடத்தி தலைமறைவான 2 தம்பதிகளையும் தேடிவருகின்றனர்.
Average Rating