சீனாவில் மீண்டும் நிலக்கரி சுரங்க விபத்து: 11 தொழிலாளர்கள் பலி…!!
சீனாவில் நேற்று நிகழ்ந்த நிலக்கரி சுரங்க விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய சீனாவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
ஷான்ஸி மாகாணத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் 49 பேர் பணி புரிந்து வந்தனர். 11 பேர் தவிர மற்ற தொழிலாளர்கள் சுரங்கத்தைவிட்டு உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டதாக யுலின் நகர செய்தித் துறை கூறியுள்ளது. மேலும் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நீண்ட காலமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும் பல்வேறு சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு விபத்துக்கள் இந்த சுரங்க வேலைபாடுகளில் நடைபெற்று வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து உள்ளது.
இருப்பினும் கடந்த சில வாரங்களாக சுரங்க விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கிழக்கு ஷாண்டாங் மாகாணத்தில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 13 பேரைக் காணவில்லை.
Average Rating