24 மணி நேரத்தில் லெபனானில் 150 இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்
கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் உள்ள 150 இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை கூறியது. லெபனான் மீது 11-வது நாளாக, சனிக்கிழமையும் விமானத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் குண்டுகளை ஏவும் தளங்கள், அவற்றின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் லெபனானையும் சிரியாவையும் இணைக்கும் 12 சாலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசித் தகர்த்தன என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலில் உள்ள கார்மேல் நகரத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசினர். அதில் ஒரு வீடு சேதமடைந்தது. அப்போது அந்த வீடு காலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு வீசிய ராக்கெட் குண்டு வெடித்து இரு இஸ்ரேலியர்கள் லேசாகக் காயமடைந்தனர் என்று இஸ்ரேல் போலீஸôர் தெரிவித்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆயுதங்களை சிரியா வழங்கிவருகிறது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. எனவே, லெபனானையும் சிரியாவையும் இணைக்கும் சாலைகளைக் குறிவைத்துத் தகர்த்துவருகிறது இஸ்ரேல் விமானப் படை.
இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் லெபனானைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் 305 பேர் பலியாகியுள்ளனர்; ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 36 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் ராக்கெட் குண்டுவீச்சில், இஸ்ரேலைச் சேர்ந்த 33 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 15 பேர் அப்பாவிப் பொதுமக்கள்.
இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, தெற்கு லெபனானில் இருந்து 5 லட்சம் மக்கள் தமது வீடு வாசல்களை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.