அமெரிக்காவில் கீழே விழுந்து காயம் அடைந்ததால் இந்திய தம்பதியிடம் இருந்து 2 மாத குழந்தை பறிப்பு…!!
இந்தியாவைச் சேர்ந்த ஆஷிஷ் பரீக்-விதிஷா என்ற தம்பதி, அமெரிக்காவின் ஜெர்சி நகரில் வசித்து வருகிறது.
விதிஷாவுக்கு கடந்த அக்டோபர் மாதம், அங்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஷ்வித் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை சமீபத்தில் தலைக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. தலையில் உள்காயம் காணப்பட்டதால், வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு அக்குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகமே மாற்றியது. அங்கிருந்த டாக்டர்கள், அக்குழந்தை பற்றிய விவரத்தை குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தாயின் கையில் இருந்து நழுவிய குழந்தையின் தலை, டி.வி. ஸ்டாண்டில் இடித்ததால் காயம் ஏற்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், குழந்தையை பெற்றோர் துன்புறுத்தியதாக கருதினர்.
எனவே, ஆஸ்பத்திரியில் குழந்தையை பார்க்கக்கூட பெற்றோரை அனுமதிக்கவில்லை. குழந்தை நலமடைந்த பிறகு, அதை குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் பேசி வருகிறது. இருப்பினும், கோர்ட்டு மூலமாகவே பிரச்சினையை அணுக தூதரகம் முடிவு செய்துள்ளது.
Average Rating