காவேரிப்பாக்கம் அருகே மனைவி–மகளை அடித்துக்கொன்ற விவசாயி…!!
காவேரிப்பாக்கம் அருகே குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மகளை விவசாயி அடித்துக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் அண்ணா வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 41). விவசாயி. பிரபாகரனுக்கும் சென்னை அம்பத்தூர் பாடி பகுதியை சேர்ந்த ரபி (35) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஹேமலதா (13) என்ற மகள் இருந்தார். திருமணமான சில மாதங்கள் மட்டுமே பிரபாகரனும், ரபியும் சந்தோஷமாக வாழ்ந்தனர். அதன் பின்னர் வரதட்சணை கேட்டு ரபியை பிரபாகரன் அடித்துக் கொடுமைப்படுத்தினார்.
கணவரின் சித்ரவதையை தாங்க முடியாமல் ரபி கடந்த 2003–ம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
ஜெயிலில் இருந்த பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து கடந்த 2006–ம் ஆண்டு பிரபாகரனுக்கு ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. பிரபாகரன் அபராதத்தை செலுத்தினார்.
அதன் பின்னர் ரபியுடன் சேர்ந்து வாழ பிரபாகரன் விரும்பவில்லை. ரபி மீது கடும் கோபத்தில் இருந்தார். ரபியை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றினார். ரபி தனது மகள் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் 2010–ம் ஆண்டு வாலாஜா அருகே உள்ள வாணிசத்திரம் கிராமத்துக்கு மகளுடன் வந்து வாடகை வீட்டில் குடியேறினார். அங்குள்ள ஷூ கம்பெனியில் ரபி வேலைக்கு சேர்ந்தார்.
மகளை காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார். அங்கு ஹேமலதா 8–ம் வகுப்பு படித்து வந்தார். பிரபாகனுக்கும் ரபிக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது. மகளையும் பிரபாகரன் பார்க்க வராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக ரபியையும், ஹேமலதாவையும் பிரபாகரனின் தாயார் வீட்டுக்கு அழைத்தார். மாமியார் அழைத்ததாலும், பிரச்சினை முடிந்து கணவருடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையிலும் ரபி தனது மகளை அழைத்துக்கொண்டு நேற்றிரவு பிரபாகரனின் வீட்டுக்கு வந்தார்.
வீட்டில் ரபியையும், ஹேமலதாவையும் பார்த்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார். ரபியுடன் தகாராறில் ஈடுபட்டார். 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்தின் உச்சியில் இருந்து பிரபாகரன் அங்கிருந்த இரும்பு ராடால் ரபியையும், ஹேமலதாவையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரபியும், ஹேமலதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
Average Rating