இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது வழக்குபதிவு…!!
மும்பையில் இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தி நடிகர் நவாஸுத்தின் சித்திக் தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரி மேற்கு வெர்சோவா யாரிரோடு, ஜே.என்.கே. சொசைட்டி கட்டிடத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார்.
இவர் வசிக்கும் கட்டிடத்தின் கீழ்தளத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அவர் தன்னுடைய காரை நிறுத்தினார். இதனை இதே குடியிருப்பில் வசிக்கும் ஹீனா (வயது 24) என்பவர் தட்டிக் கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொறுமையிழந்த நடிகர் நவாஸுத்தின் சித்திக், திடீரென ஹீனாவின் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என ஒரு அறை விட்டார். மேலும், அவரது செல்போனை கீழே தட்டிவிட்டு அவரை மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஹீனா, அதிர்ச்சியில் உறைந்தார்.
பின்னர், அழுது கொண்டே இந்த சம்பவம் குறித்து வெர்சோவா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் நவாஸுத்தின் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating