ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்
ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 15 வீடுகள் சேதமடைந்தன. மனித வெடிகுண்டு ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க ஆதரவு அரசு படைகளுக்கும் இடையே அன்றாட மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது. மனித வெடிகுண்டுகளாக வரும் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வாகனங்களை மோத விட்டு தாக்குதல் நடத்துவது வழக்கம். இதே போன்ற தாக்குதல் ஈராக்கில் நடந்தது. வடக்கு ஈராக்கில் பைஜி என்னும் இடத்திற்கு தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் காரில் வெடிகுண்டுகளை ஏற்றிவந்தான். அது ராணுவ அதிகாரி அலி சாகர் வசிக்கும் வீடுகள் உள்ள பகுதியாகும். ராணுவ வீரர்கள் பலி இதனால் அவன் வந்த காரை ராணுவ வீரர்கள் மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது அந்த தீவிரவாதி காரை வேகமாக ஓட்டிச்சென்று அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதினான். அப்போது அதிலிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறின. இதில், சம்பவ இடத்திலேயே அங்கிருந்த ராணுவ வீரர்கள் 7 பேர் பலியானார்கள். மேலும் வீடுகளில் வசித்த 35 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 கார்களும், 15 வீடுகளும் கடுமையான சேதம் அடைந்தன. ராணுவ அதிகாரி அலிசாகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மோதல் அதிகரிப்பு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈராக்கில் 26 பேர் தற்கொலைப் படை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும், சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதன் காரணமாகவும் தற்போது ஈராக்கில் தற்கொலை படைத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.