ஆப்கானில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில், காபூல் நகரில் ரஷிய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவ்வழியாக சென்ற மினிபஸ் மீது தற்கொலை தீவிரவாதி மோதி வெடிக்க செய்து உள்ளான். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் 24 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் ரஷிய தூதரகம் குறிவைக்கப்பட்டதா என்பது உடனடியாக உறுதியாகவில்லை…
இத்தாக்குதலுக்கு எந்தஒரு தீவிரவாத இயக்கமும் இதுவரையில் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் தீவிரவாதிகள் உடனான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சீன நாட்டின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இத்தாக்குதலானது நடத்தப்பட்டு உள்ளது.
தற்கொலை தாக்குதலில் காயம் அடைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு தயாராகும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலும் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு தூதரகங்கள் தாக்குதலுக்கு இலக்காகின என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளும் தலிபான் பிரதிநிதிகளை பாகிஸ்தான் அறிவிக்கும் என்று கூறிஉள்ள ஆப்கானிஸ்தான், பேச்சுவார்த்தை மையத்திற்கு தீவிரவாத குழுவை அழைத்துவர பாகிஸ்தான் உதவியை எதிர்பார்த்து உள்ளது.
Average Rating