கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 1,042 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 3,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அவதானம் ஏற்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளில் எதிர்வரும 28 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சூழலில் காணப்படும் நுளம்பு பெருக்க்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.
அத்துடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக அருகிலுள்ள வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Average Rating