தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்
தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் மகளை உயிரோடு எரிக்க முயன்ற அவருடைய காதலன், தானும் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்தத் தயாரிப்பாளருக்கு ஒரு மகள் இருக்கிறார். டீன் ஏஜ் வயதுடைய அவருக்கும், வெங்கடராஜுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராஜு, தயாரிப்பாளரின் மகளை விட்டு விட்டு ஓடி விட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது வீட்டுக்குத் திரும்பி விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தயாரிப்பாளரின் வீட்டுக்கு ராஜு வந்தார். கையொடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டார். வீட்டில் தனியாக இருந்த தனது முன்னாள் காதலி மீதும் பெட்ரோலை ஊற்றினார். இதனால் அந்தப் பெண் உதவி கேட்டு குரல் எழுப்பினார். ஆனால் அதற்குள் தன் மீது தீ வைத்துக் கொண்ட ராஜு, காதலியையும் கட்டிப் பிடித்து கொல்ல முயன்றார். ஆனால் அந்தப் பெண் ராஜுவின் பிடியிலிருந்து தப்பி ஓடினார். இதனால் சிறியளவிலான காயத்துடன் அப்பெண் தப்பினார். ஆனால் பாதி உடம்பு எரிந்த நிலையில் ராஜூவை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது உயிர் ஊசலாடி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.