பள்ளியில் மாணவனை சுட்டுக் கொன்ற மாணவன்
டெல்லி அருகே சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடந்த பயங்கர சம்பவத்தில், 8வது வகுப்பு மாணவன் சக மாணவனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் நகரில் ஈரோ சர்வதேச உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபிஷேக் தியாகி (12). அபிஷேக் தியாகிக்கும், அவனுடன் படித்து வரும் ஆகாஷ் மற்றும் விகாஷ் ஆகிய சக மாணவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வகுப்பறைக்கு வெளியே நின்றபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஆகாஷ், தனது பையில் வைத்திருந்த ரிவால்வரை எடுத்து அபிஷேக் மீது சரமாரியாக சுட்டான். மிக நெருக்கமாக வைத்து ஆகாஷ் சுட்டதால் மார்பில் குண்டு பாய்ந்து அபிஷேக் தியாகி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தான். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அகற்றப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள், ஆகாஷ் மற்றும் விகாஷ் இருவரையும் பிடித்து வைத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் கைது செய்தனர். அபிஷேக் தியாகியின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவனது உடலில் 5 குண்டுகள் பாய்ந்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ஆகாஷ் பயன்படுத்திய துப்பாக்கி அவனது தந்தையின் துப்பாக்கி ஆகும். இது உரிய லைசன்ஸுடன் கூடியது. ஆகாஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அடிக்கடி அபிஷேக் தியாகி என்னிடம் சண்டை பிடிப்பான். திட்டுவான். இதனால்தான் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்ேடன் என்று கூறியுள்ளான். அமெரிக்க பாணியில், பள்ளி வளாகத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் ஹரியாணாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.