கடலில் கரை ஒதுங்கிய காலிப் புட்டியில் ஸ்காட்லாந்து காதலர்களின் கடிதம்…!!
துண்டுக் காகிதத்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கடிதம்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியால் கடிதத்துடன் வீசப்பட்ட மதுப்புட்டி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது.
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவர் பட்டிபுலம் கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சிக்காகச் சென்றபோது, அலைகளால் தூக்கி வீசப்பட்டு கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த மதுப்புட்டி ஒன்றைக் கண்டெடுத்தார்.
அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு துண்டுக் காகிதத்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கடிதம் மதுப்புட்டிக்குள் செருகப்பட்டிருந்தது. கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது, ஸ்காட்லாந்தை நாட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் மார்க், லென்சி ஆகியோர் மாலத்தீவில் அந்தப் புட்டியை கடலில் வீசியது தெரியவந்தது.
மாலத்தீவுக்கு வந்த அந்த காதல் தம்பதி, தேன்நிலவைக் கொண்டாடியுள்ளனர். அப்போது அந்த மதுபுட்டியில் இருந்த மதுவை அருந்தி மகிழ்ச்சி அடைந்ததாகவும், காலிப்புட்டி கிடைக்கப் பெற்றவர்கள் தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தைச் சுமந்த மதுப்புட்டி சுமார் 10 மாத பயணத்துக்குப் பிறகு கரை ஒதுங்கியுள்ளது.
மதுப்புட்டியைக் கண்டெடுத்த கோதண்டபாணி, கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டார்.
தங்கள் கடிதம் ஒருவர் கையில் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நட்பைத் தொடர வேண்டும் என்றும் ஸ்காட்லாந்து தம்பதி கேட்டுக்கொண்டனர். மேலும், தன்னை ஸ்காட்லாந்து வருமாறு அவர்கள் அழைத்ததாகவும், கோதண்டபாணி தெரிவித்தார்.
Average Rating