அமெரிக்காவிலுள்ள இரு தேவாலயங்களில் ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம்
அமெரிக்காவில் இரு தேவாலயங்களுக்குள் புகுந்த ஆயுததாரி அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் பலியானதுடன், ஆறுபோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலராடா மாநிலத்திலுள்ள அரவாடா என்னும் இடத்தில் பாதிரியார்களுக்கான பயிற்சிப் பாடசாலையும் உள்ளது. இப்பாடசாலைக்கு இரவு 12.30 மணியளவில் ஓர் மர்ம மனிதன் வந்து அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டான். அதற்கு நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த அவன் துப்பாக்கியால் அங்கிருந்த 2 பேரை சுட்டுக்கொன்றான். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அதன்பிறகு அவன் தப்பி ஓடிவிட்டான். இச்சம்பவம் நடந்த 12 மணிநேரத்துக்கு பிறகு அந்த இடத்தில் இருந்து 112 கி.மீ.தொலைவில் உள்ள கொலராடா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே இன்னொரு வன்முறை சம்பவம் நடந்தது. கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்து விட்டு கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் வெளியே வந்தனர். அவர்களை பார்த்து ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் பலியானார் மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் இதை பார்த்துவிட்டு, கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அரவாடா நகரில் துப்பாக்கியால் சுட்டவன் தான் இந்த கொலராடா ஸ்பிரிங்ஸ் கொலைகளுக்கும் காரணமாக இருக்கும் என்று பொலிஸார் நம்புகின்றார்கள். இரு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரின் அங்க அடையாளங்களும் ஒரே மாதிரி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொலையாளி வெள்ளை நிறமாகவும் 20 வயதுக்கும் மேற்பட்டவனாகவும் இருந்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் ஆவார், கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுறிருக்காவிட்டால் மேலும் பல உயிர்களை நாம் இழந்திருக்கக்கூடும் என்று கொலராடா ஸ்பிரிங்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரண்டாவது சம்பவத்துக்கு சரியான காரணம் எதுவென இதுவரை தெரியவரவில்லை.