திண்டுக்கல்லில் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்..!!
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கடத்திய மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அடியனூத்து வாழைக்காய்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
2–வது முறையாக கர்ப்பம் தரித்த மாரியம்மாள் நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்ததாலும் 2 குழந்தைகள் பெற்றதாலும் மாரியம்மாளுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை ஆபரேசனுக்காக அவரது கணவர் சந்திரசேகரன் மாரியம்மாளின் தாய் சந்திரா, மாமியார் செல்வி ஆகியோர் வந்திருந்தனர். குழந்தையை தனது அம்மாவிடம் கொடுத்து விட்டு மாரியம்மாள் தனது கணவருடன் பேசிக் கொண்டிருந்தார். பிரசவ வார்டுக்கு வெளியே குழந்தையை வைத்துக் கொண்டு சந்திரா அமர்ந்திருந்தார். அவரது அருகில் மாரியம்மாளின் மாமியார் செல்வியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சம்பந்தமில்லாத ஒரு பெண் அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் நைசாக சந்திராவிடம் பேச்சுக் கொடுத்து குழந்தையை வாங்கிக் கொஞ்சுவது போல கொஞ்சினார். சந்திரா அந்த சமயத்தில் உள்ளே சென்று தனது மகளை பர்த்து வருவதாக கூறி சென்றார். அவரது பின்னே செல்வியும் வந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண் கைக்குழந்தையை கடத்திச் சென்றார்.
குழந்தை இல்லாமல் வந்த செல்வியைப்பார்த்து சந்திரா உன்னை நம்பிதானே குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு வந்தேன் என அங்கு வந்து பார்த்தபோது அந்த பெண் மாயமாகி இருந்தார். இது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக ஆஸ்பத்திரியின் அனைத்து கேட்டுகளும் பூட்டப்பட்டு அந்த பெண்ணை அவர்கள் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை கடத்திய அந்த பெண்ணை தேடி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating