ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 30), சவர தொழிலாளி. இவரது மனைவி மதிமொழி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு ரஷ்மிகா (2) என்ற பெண் குழந்தையும், ஹரிஸ் என்ற 8 மாத ஆண் குழந்தையும் உள்ளது. குமாருக்கு குடும்பம் நடத்த போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மதிமொழி அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார். பின்னர் அவரால் வாங்கிய கடன் தொகையை கொடுக்க முடியவில்லை. இதனால் மதிமொழி கவலை அடைந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.