பொய்யான பரப்புரைகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!!
பொய்யான பரப்புரைகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது, கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் வார இறுதி ஆங்கில பத்திரிகையொன்று வெளியிட்டிருந்த பிரதான செய்தி பொய்யானது.
வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளாது அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கில் சில தரப்பினர் பொய்யான பரப்புரைகளை செய்கின்றனர்.
இவ்வாறு ,பொய்யான செய்திகளை வெளியிடுவதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் அச்சமடையக் கூடும்.பொய்யான செய்திகளை பிரசுரிக்கும் போது எங்கள் பக்கத்தின் தகவல்களையும் சற்றே கேட்டறிந்து கொள்ளவும்.
நல்லாட்சியை ஏற்படுத்தி ஊடகங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியிருந்தோம்.இந்த ஊடக சுதந்திரத்தை மிகவும் மோசமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். அனைத்து ஊடகங்களும் அல்ல சில ஊடகங்கள் எமது வெற்றிப் பயணத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றன.
மேலும் ,ஊடக சுதந்திரத்தை மிகவும் மோசமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
Average Rating