மதுராந்தகம் அருகே மரத்தில் கார் மோதல்: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி…!!
புதுச்சேரியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தவர்கள் முத்துபாலமுரளி (வயது 22), ராகுல் (21). இருவரும் நேற்று மாலை சென்னையில் உள்ள நண்பர்களை பார்க்க காரில் வந்தனர்.
இன்று அதிகாலை இருவரும் அதே காரில் புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர். மதுராந்தகம் அருகே உள்ள கடப்பாக்கத்தை அடுத்த நல்லூர் அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. காரில் இருந்த மாணவர்கள் முத்துபாலமுரளி, ராகுல் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விபத்து பற்றி அறிந்ததும் சூனாம்பேடு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மாணவர் முத்துமுரளியின் சொந்த ஊர் சால்குடி ஆகும். ராகுலின் சொந்த ஊர் கரூர். 2 பேரும் விபத்தில் பலியானது பற்றி அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மதுராந்தகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Average Rating