பெண் “துணை’ இல்லாமல் தவிக்கிறது அபூர்வ இரட்டைக்கொம்பு காண்டாமிருகம்
இந்திய அசாம் மாநில வனவிலங்கு சரணாலயத்தில் காண்டாமிருகங்களுடன் உள்ள, மோகன் என்ற ஆப்ரிக்க நாட்டு இரட்டை கொம்பு இன காண்டாமிருகம், பெண் துணையின்றி 30 ஆண்டுகளாக தவித்து வருகிறது. ஒற்றைக் கொம்பு பெண் காண்டாமிருகங்கள் இருந்தும், அவற்றின் சேர்க்கை கூடாது என்பதால், சரணாலய நிர்வாகம், என்ன செய்வது என்று குழம்பியுள்ளது. இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை. ஆப்ரிக்காவில் தான் இரட்டைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் மோகன் என்று பெயரிடப்பட்ட இரட்டை கொம்பு காண்டாமிருகம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த காண்டாமிருகம், பெண் துணையில்லாமல் உள்ளது. ஆரம்பத்தில், ஒற்றை கொம்பு பெண் காண்டாமிருகத்தைத் தான், மோகனுக்கு பெண் துணையாக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏற்கனவே, அலிப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில், புலிகள் மற்றும் சிங்கங்கள் மூலம், புலிங்கம், சிங்லி என்று பெயரிடப்பட்ட கலப்பினங்கள் உருவாக்கும் முயற்சி விபரீதமானதால், அதிகாரிகள் இத்திட்டத்தை கைவிட்டனர். இந்தியா முழுவதும் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தேடிய போது, இன்னொரு இரட்டை கொம்பு காண்டாமிருகம் மைசூர் வனவிலங்கு பூங்காவில் இருப்பது தெரிய வந்தது. ஆனால், மோகனின் துரதிருஷ்டம்; அந்த காண்டாமிருகமும் ஆண் தான். பெண் துணை இல்லாததால், வெறுப்படைந்துள்ள மோகன், தான் அடைக்கப்பட்டுள்ள கூண்டின் மீது மோதி தனது கோபத்தை தணித்துக் கொள்கிறது. இதனால், மோகனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்படுகிறது. மேலும், காமவேட்கையில் உடல்நலமும் சீர் கெடுகிறது. அடிக்கடி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறது. பல மருந்துகள் கொடுக்கப்பட்டு, தற்போது ஒரே ஒரு மருந்துக்குத் தான் வயிற்றுப் போக்கு கட்டுப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து இரட்டைக் கொம்பு பெண் காண்டாமிருகம் கொண்டு வர நிறைய செலவாகும் என்று சரணாலய நிர்வாகம் தயங்குகிறது. மோகனுக்கு இன்னும் ஆயுசு 10 ஆண்டுகள் மட்டுமே. இதனால், மோகனின் வாழ்நாளில் ஒரு முறையாவது இனச்சேர்க்கைக்கு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.