அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார், அப்துல்கலாம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு 4 மாத தாமதத்துக்கு பின் டெல்லியில் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இல்லம் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம், கடந்த ஜுலை 25-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு, அவர் விரும்பும் பட்சத்தில் டெல்லியில் அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்க வேண்டும். 75 வயதான கலாம் பல இடங்களை பரிசீலித்து, கடைசியில் எண் 10, ராஜாஜி மார்க் சாலையில் உள்ள பங்களாவை ஜுலை 2-வது வாரம் வாக்கில் தேர்ந்தெடுத்தார். உடனே இதுபற்றி மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதியின் அதிகாரிகள் தகவல் தந்தனர். ஆனால், 5 ஆயிரம் சதுர அடியில் அமைந்த அந்த பங்களாவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், கலாமுக்கு டெல்லி கண்டோன்மென்டில் ராணுவத்துக்கு சொந்தமான பகுதியில் சிறிய தற்காலிக இல்லம் ஒதுக்கப்பட்டது. கலாமும் ஓய்வு பெற்றதும், அந்த வீட்டில் குடிபுகுந்தார். ஆமை வேகத்தில் பணிகள் எனினும் கலாமுக்கு ஒதுக்கிய அதிகாரப்பூர்வ இல்லத்தை கூடிய சீக்கிரத்தில் புதுப்பித்து தர வேண்டும் என்று அவரது அலுவலகத்தில் இருந்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு பலமுறை நினைவூட்டல்கள் சென்றன.
பாதுகாப்பு ஏஜென்சிகளும் தங்கள் பங்குக்கு கடிதம் அனுப்பின. கலாம் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். அவருக்கு லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு ஒதுக்கிய பங்களாவில் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டி உள்ளது. எனவே மராமத்து பணிகளை சீக்கிரம் முடியுங்கள் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
எனினும் பங்களாவை பழுது பார்க்கும் பணிகள், ஆமை வேகத்தில்தான் நடந்தன. அக்டோபர் கடைசி வரை, பங்களாவில் இருந்து பழுதான மரச்சாமான்கள், உலோக சாமான்கள் மற்றும் இடிபாடுகள் வெளியில் சென்ற வண்ணம் இருந்தது.
4 மாத காத்திருப்பு
ஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின் பங்களா தயாரானது. அதையடுத்து கடந்த 13-ந்தேதி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார் கலாம்.
நாட்டின் ஜனாதிபதியாக 5 ஆண்டு காலம் பதவி வகித்து, 2 பிரதமர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவருக்கு, அதிகாரிகளின் மெத்தனத்தால் தலைநகரில் அதிகாரப்பூர்வ வீடு கிடைப்பதற்கு 4 மாதம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
இந்த தாமதத்துக்கு மத்திய பொதுப்பணித் துறையில் இருந்து ஒரு அதிகாரி கூட பொறுப்பேற்க முன்வரவில்லை.