கண்ணமங்கலம் அருகே மாற்று சான்றிதழ் கேட்டு கல்வி அதிகாரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்…!!
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அரசு நிதி உதவி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சரசு (வயது 40) என்பவர் 1981–ம் ஆண்டு 5–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் திருமணமாகி கணவர் பார்த்திபனுடன் கணியம்பாடி கோவில்மேடு பகுதியில் வசித்து வந்தார். பார்த்திபன் கலவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்து விட்டார்.
இதனால் சரசு வாரிசு அடிப்படையில் தனக்கு அரசு வேலை கேட்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். மேலும் தான் படித்த நிதி உதவி தொடக்க பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளார். 3 மாதமாகியும் அவருக்கு மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதனால் நேற்று சரசு தனது உறவினர்களுடன் ரெட்டிப்பாளையம் நிதி உதவி தொடக்க பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியை சங்கரியிடம் மாற்றுச்சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால் தலைமை ஆசிரியை மாற்றுச் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்.
அப்போது உதவி தொடக்க கல்வி அலுவலர் உதயக்குமார் பள்ளிக்கு வந்தார். அவருடைய காலில் சரசு விழுந்து சான்றிதழ் கொடுக்குமாறு கெஞ்சினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர் மாற்றுச் சான்றிதழ் கொடுக்குமாறு தலைமை ஆசிரியை சங்கரியிடம் கூறினார். அவர் கூறியும் தலைமை ஆசிரியை மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து சரசு தனது உறவினர்களுடன் சேர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை சங்கரியிடம் கேட்டபோது மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு முறையான உத்தரவு வழங்கினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் உதயக்குமாரிடம் கேட்டதற்கு ‘சரசுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கிட ஏற்கனவே தலைமை ஆசிரியை சங்கரிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறேன். ஆனால் கொடுக்க மறுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி இன்று மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Average Rating