வாரிக்குட்டியூர் பகுதியில் கிளேமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி, 2 பேர் காயம்
Read Time:1 Minute, 13 Second
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் வீதிரோந்தில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இந்தத் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர். இவ்விருவரும் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.இந்தக் கிளேமோர் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் இணைந்து நீண்டநேரம் தேடுதலை நடத்தினர்.