மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை…!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 1500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக அதிகாரிகள் நேரில் சென்று கணக்கு எடுப்பது வழக்கம்.
நேற்று மாலை வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டி இதுதொடர்பான கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது ரவீந்திரன் (வயது45) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் திடீரென வருவாய் ஆய்வாளரை கண்டித்து ரவீந்திரன் அங்குள்ள உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்தார்.
இது பதட்டத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டியை சிலர் சரமாரியாக தாக்கி சிறை பிடித்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் இரவு 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் சம்பவ இடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது திடீர் சலசலப்பு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி சிறைபிடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டியை மீட்டு அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் பலியான ரவீந்திரனின் மனைவி மஞ்சுளா கோரிக்கை மனு அளித்தார்.
ரவீந்திரன் பலியான சம்பவம் குறித்து வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டி மீது தற்கொலைக்கு தூண்டியதாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட ரவீந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உச்சப்பட்டி முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் சசிபெருமாளை போன்று ரவீந்திரனும் உயிர் இழந்துள்ளார். அவரது சாவுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அகதிகள் முகாமில் வாரந்தோறும் நடத்தப்படும் சரி பார்க்கும் பணி (ரோல் கால்) தேவையில்லை. இந்த கெடுபிடிகளை தளர்த்தி 25 ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating