வீடு புகுந்து திருடிவிட்டு காரின் அடியில் பதுங்கிய கொள்ளையன் சிக்கினான்…!!
தண்டையார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மாடியில் இருந்த கதவை உடைத்த கொள்ளையன் பழனிவேல் வீட்டுக்குள் புகுந்தான். அங்கிருந்த சாவி மூலம் பீரோவை திறந்து 21 பவுன் நகை கொள்ளையடித்த அவன் லேப்–டாப்பை எடுத்தான். அப்போது சத்தம் கேட்டு எழுந்த பழனிவேல் வீட்டுக்குள் மர்ம நபர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து ரோந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி சிறப்பு இன்ஸ்பெக்டர் லோகநாதன், தலைமை காவலர்கள் ராஜேஷ், விஜயகுமார், பிரசாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சம்பவம் நடந்து சிறிது நேரமே ஆனதால் கொள்ளையன் அப்பகுதியில் தான் பதுங்கி இருப்பான் என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அங்கு நின்றிருந்த காரின் அடியில் பதுங்கி இருப்பானோ? என்று சந்தேகம் அடைந்த போலீசார் டார்ச்லைட் மூலம் பார்த்தனர். அப்போது கொள்ளையன் கார் அடியில் பதுங்கி இருந்தது தெரிந்தது.
உடனே அவனை பிடித்து போலீசார் வெளியே கொண்டு வந்தனர். விசாரணையில் அவன் எர்ணாவூரை சேர்ந்த அந்தோணி (18) என்பது தெரிந்தது. தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். வேறு எந்த பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டான் என்று விசாரித்து வருகிறார்கள்.
Average Rating