நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…!!
நன்னிலம் அருகே ஓய்வு பெற்ற பெல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதம் பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் இறந்து விட்டார்.
இவரது மனைவி வனஜா. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருச்சியில் வசித்து வருகிறார்கள். மகன்கள்–மகளை பார்க்க வனஜா திருச்சி சென்றார்.
தனது வீட்டின் சாவியை அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை– தாயிடம் ஒப்படைத்து புறப்பட்டார். வனஜா சென்ற அன்று மாலை அவரது தந்தை வெங்கடேசன் வீட்டின் விளக்குகளை போட்டு விட்டு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், வளையல்,நெக்லஸ், தோடு உள்ளிட்ட 50 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது.
மேலும் 2 ஜோடி கொலுசு, வெள்ளிப்பொருட்கள், ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவையும் காணாமல் போய் இருந்தது. இதனையும் திருடர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து நன்னிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. அறிவானந்தம், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனர்.
திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ஜெர்சி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டில மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
வனஜா தனது மகன்கள் வீட்டிற்கு செல்வதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating