தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….!!

Read Time:13 Minute, 38 Second

timthumb‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.

முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.

தொடர்ந்து ………………….

• ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்’ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது.

• கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது!

• பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.

• ‘இது புளியங்குளம் அல்ல, புரட்சிக்குளம்’ நித்தியா எனும் போராளி தமிழினிக்கு எழுதுிய கடிதம்

பயிற்சி பெற்ற போராளிகளை இணைத்து மேஜர் சோதியாவின் பெயர் கொண்ட புதிய மகளிர் படையணி, தலைவரால் உருவாக்கப் பட்டது.

சோதியா யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றிருந்த இவர் மிகுந்த போர்ச் செயற்பாட்டுத் திறனும், விரைந்து செயற்படும் நிர்வாகத் திறனும் கொண்ட போராளியாக உருவாகியிருந்தார்.

மருத்துவப் போராளியாக ஆரம்பத்தில் செயற்பட்டுப் பின்னர் மகளிர் படையணியின் முதலாவது சிறப்புத் தளபதியாகத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்.

இவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 11.01.1990 மணலாற்றுக் காட்டுப் பகுதியில் மரணமடைந்திருந்தார்.

இவரது உடல் யாழ்ப்பாணத்தில் கிளாலி மகளிர் பயிற்சி முகாமில் அடக்கம் செய்யப்பட்டதுடன் அந்த முகாம் ‘மேஜர் சோதியா பயிற்சிப் பாசறை‘ என்ற பெயருடன் அழைக்கப்பட்டது.

அப்பாசறையி லேயே நானும் எனது ஆயுதப் பயிற்சியை 1992இல் மகளிர் படையணியின் இருபத்தோராவது அணியில் பெற்றிருந்தேன்.

இந்தப் பயிற்சி முகாம் 1987இல் விடுதலைப் புலிகளால் வடக்கில் அமைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான முதலாவது ஆயுதப் பயிற்சி முகாமாகும்.

சோதியா படையணியின் சிறப்புத் தளபதியாக துர்க்கா நியமிக்கப்பட்டிருந்தார். அடிப்படையில் இவரும் ஒரு மருத்துவப் போராளியாக இருந்து தாக்குதல் தளபதியாகத் தரமுயர்த்தப் பட்டிருந்தார்.

மேஜர் சோதியா படையணியானது ஒரு ‘காட்டுப் படையணி’ (Jungle இந்தப் படையணிப் போராளிகள் கணிசமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது.

ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.

முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.

முள்ளியவளை ரங்கன் முகாமில் அடிக்கடி கலை நிகழ்வுகளும் இசைக்குழு நிகழ்வுகளும் நடாத்தப்படும்.

மீன்பாடும் தேன்நாட்டின் வாரிசுகளான கிழக்கு மாகாணப் போராளிகள் அற்புதமான கலையாற்றல் உள்ளவர்களாக இருந்தனர்.

அவர்களுக்கே உரிய பாணியில் லாவகமான நகைச்சுவை ததும்ப அவர்கள் தமிழ்ப்பேசும் அழகே அழகு.

எனது மனங்கவர்ந்த பல தோழிகள் அம்முகாம்களில் இருந்தனர்.

வன்னிப் போர்க்களத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்‘ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது.

சொற்பமான அரிசியும் நிறையத் தண்ணீரும் உப்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட கஞ்சி பிளாஸ்டிக் பைகளில் முன்னணிக் களமுனைகளுக்குத் தினசரி காலை உணவாகக் கொண்டு வரப்படும்.

மதியத்தில் சோறும் மாட்டிறைச்சி அல்லது கத்தரிக்காய்த் தண்ணிக்கறியும் இரவு புட்டும் தக்காளி தண்ணிக் குழம்பும் என்பதான உணவுகள், கடுமையான களப்பணிகளில் ஈடுபட்டிருந்த போராளிகளின் பசிவயிற்றை நிரப்பியதே தவிர போதிய போசாக்கினை அளிக்கவில்லை.

ஏனெனில் கணத்துக்குக் கணம் அதிர்ந்து கொண்டிருந்த களமுனைகளில் போராளிகள் அதிக அளவில் உயிரிழந்து கொண்டும், படுகாயமடைந்து கொண்டும் இருந்தனர்.

இதேவேளை காயமடைந்த போராளிகள், அவர்களது காயங்கள் முற்றாகக் குணமடைவதற்கு முன்னரே மீண்டும் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.

பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.

அதேவேளை அதிக குருதி இழப்புக்குட்பட்டவர்களுக்குப் போஷாக்கின்மை காரணமாகக் காயங்கள் குணமடைவது தாமதமாவதாக மருத்துவர்கள் கவலையடைந்தனர்.

நானறிய இரண்டு போராளிகள்வரை குருதிச்சோகை காரணமாக உயிரிழந் திருந்தனர். இத்துப்போன வெளிறிய உடைகளுடன் பெண் போராளிகள் களமுனைகளில் நின்று போரிட்டனர்.

எனது பயிற்சி முகாம் தோழியான ஆந்திரா எனும் போராளி நான் பின்புறத்தில் அவளது ஜீன்ஸ் தேய்ந்து பிய்ந்துபோயிருந்தது.

“நீ அடுத்த முறை வரும்போது எப்படியாவது எனக்கொரு சோடி உடுப்பு கொண்டு வாடியப்பா” என உரிமையுடன் கேட்டிருந்தாள். அரசியல் வேலை செய்பவர்களுக்கும் அதே நிலைமைதான் இருந்தது.

முதுகுப்புறம் வெளிறிப்போன சேட்டைப் பிரித்து உட்புறத் துணியை வெளிப்புறமாக வைத்துத் தைத்து அயன் பண்ணி அழகாக உடுத்திக்கொண்டு, மேடைகளில் ஏறிப் பேசியிருக்கிறேன்.

ஆந்திராவுக்காக ஒரு சோடி உடுப்பைத் தயார் பண்ணியிருந்தேன். அதனைக் கொண்டுபோய்க் கொடுப்பதற்கு முன்பதாகவே அவளது வீரமரண அறிவித்தலைப் புலிகளின் குரல் வானொலி அறிவித்துக்கொண்டிருந்தது.

இத்தனை கடினமான சூழ்நிலையிலும் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர் போராளிகளிடையே உணர்வு ரீதியானவொரு யுத்தமாக மாறியிருந்தது.

என்னுடன் கல்விப் பிரிவில் செயற்பட்டுக்கொண்டிருந்த போராளிகளில் சிலரும் இந்தச் சமரில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் நித்தியா எனும் போராளி இறுதியாக எனக்கு எழுதியிருந்த கடிதமொன்றில் ‘இது புளியங்குளம் அல்ல, புரட்சிக்குளம்’ என எழுதியிருந்தாள்.

நான் அடிக்கடி ஜெயசிக்குறு களமுனைகளுக்குச் சென்று பெண் போராளிகளுடன் தங்கியிருப்பதுண்டு. வெளிச் செய்திகளை அறிந்துகொள்வதில் அடர்ந்த காடுகளுக்குள் வருடக்கணக்காகக் களம் அமைத்துப் போரிட்டுக்கொண்டிருந்த போராளிகள் மிகுந்த ஆவலாயிருப்பார்கள்.

தமது குடும்பத்தவர்கள் எங்கே யிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாத நிலைமையில் பல போராளிகள் இருந்தனர்.

“நாங்கள் இந்தக் காட்டு மரங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

வெளியிலை சனங்களின்ர நிலைமை என்ன மாதிரியிருக்குது எண்டு சொல்லு, இந்தக் காட்டுக்குள்ள நடக்கிற சண்டையில நாங்கள் செத்துப்போனால் எங்கட உடம்புகூட அம்மா, அப்பாவிடம் போகுமோ தெரியாது.

மழை, பனி, வெயில் இப்பிடி எல்லாக் காலங்களும் இந்தக் காடுகளுக்குள்ளேயே கழிந்து போகுது” இப்படியாக ஆயிரமாயிரம் கதைகள், ஏக்கப் பெருமூச்சுக்கள்.

வருடக்கணக்காக நடந்த யுத்தத்தில் அந்தக் காடுகளுக்குள்ளேயே வாழ்ந்து காட்டு மரங்களில் தமக்குப் பிடித்தமானவர்களின் பெயரெழுதிப் பார்த்து, கண்களுக்குள் கனிந்த அன்பை மௌனக் காதலாகத் தமது நெஞ்சுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு, வன்னிக்காட்டு மரங்களின் வேர்களுக்குள் வாழ்க்கை முடிந்துபோனவர்களின், கதைகளும் கனவுகளும் எனது நினைவடுக்குகளில் ஆழப் புதையுண்டுபோய்க் கிடக்கின்றன.

இக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் நிலைமை எம்மை விடவும் மோசமாக இருந்தது.

சாதாரண மருந்துப் பொருட்கள், எரிபொருள் முதலான அத்தியாவசியத் தேவைகளைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அரசாங்கத்தால் விதிக்கப் பட்ட பொருளாதாரத் உணவுப் பங்கீட்டு அட்டைமூலம் வழங்கப்படும் சொற்பமான பொருட்களையும், ஓரிரு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட பாவனைப் பொருட்களையும் ஜீவாதாரமாகக் கொண்டு உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.

தாய் சேய் போஷாக்கின்மை, மாணவர்கள் பள்ளிப் படிப்பை விட்டு விலகுதல், போதிய மருத்துவ வசதியின்மை என நாளாந்த வாழ்க்கைப் போராட்டமே அவர்களைப் பெருஞ்சுமையாக அழுத்தியது.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் உச்ச நவீனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது, புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் கட்டை வண்டிக் காலத்திற்குப் பின்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தனர்.

ஆனாலும் நாங்கள் எப்படியாவது எமது தாய்நாட்டை விடுவித்துவிட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.

அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண அழைப்பிதழ் ஓரங்களில் மஞ்சள் பூசுவது ஏன்?
Next post நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே…! -நோர்வே நக்கீரா (கட்டுரை)…!!