எலச்சிப்பாளையம் அருகே கணவன்,மனைவி தற்கொலை…!!
எலச்சிப்பாளையம் அருகே சோகம் கணவன்,மனைவி தற்கொலை திருமணம் ஆன 1 வருடத்தில் விபரீத முடிவு
நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அருகே உள்ள இழுப்புளி, மாரப்பன் பாளையம் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). இவருக்கும், பார்வதி (வயது 21) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன பிறகு கணவன்–மனைவி இருவரும் மாரப்பன்பாளையம் காலனி பகுதியில் உள்ள வீட்டில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில். சந்தோசமாக வாழ்ந்த அவர்களுடைய வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் கணவன், மனைவி இருவரும் மனம் உடைந்தனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி, இனிமேல் இருவரும் ஒன்றாக வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து, லோகநாதனும், பார்வதியும் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களுடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினை ஏற்பட்டது? எதற்காக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்க வில்லை.
இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டதும் ஊர் மக்கள், இது பற்றி எலச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவருடைய உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருமணம் நடந்து ஒரு வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆர்.டி.ஓ. மற்றும் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தற்கொலைக்கான காரணங்கள் என்ன? என்பது தெரியவரும்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating