இலங்கை விமான தாக்குதல் 6 புலிகள் பலி
இலங்கை விமானப் படைநடத்திய தாக்குதலில் தங்களது அமைப்பைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகள் முகாம்கள் மீது கடந்த 2 நாட்களாக இலங்கை விமானப்படை தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 6 விடுதலைப் புலிகள் இறந்ததாகவும், பொதுமக்கள் 3 பேர் உள்பட 8 பேர் காயமடைந்ததாகவும் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவு தலைவர் எழிலன் கூறுகையில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்கரை பிராந்தியத்திற்குட்படட கதிரைவேலி என்ற இடத்தில் உள்ள முகாம் மீது இலங்கை விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் எமது அமைப்பைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் 3 பேர் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.
வெறுகல் ஆற்றிலிருந்து பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் குடிநீர்ப் பாதையை விடுதலைப் புலிகள் அடைத்து விட்டதாக கூறி இந்தத் தாக்குதலைஇலங்கை விமானப்படை நடத்தியுள்ளது. வெறுகல் ஆற்றுப் பகுதியிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல முல்லைத் தீவில் புலிகள் அமைத்து வரும் விமான தளத்தின் மீதும் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஆனால் இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.
இந்த விமானப் படைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், விமானப்படைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
நார்வே தூதர் பாயர் இலங்கை வரவுள்ள நிலையில், இலங்கை விமானப்படை நடத்தியுள்ள தாக்குதல் அமைதித் தீர்வுக்கான முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.