வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!!
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தண்டனை வழங்கப்படும் என வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா அச்சுறுத்தல் விடுத்ததாக அரச உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு கோரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா தலைமையில் அவரது நகரசபை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
இதன்போது நகரசபையின் செயற்பாடுகள் குறித்து செயலாளர் தர்மேந்திரா அவர்கள் கருத்து தெரிவித்த போது சில உத்தியோகத்தர்கள் நகரசபை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாடிய அதேவேளை, இனி அவ்வாறு நடந்தால் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பாணியில் தான் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த நகரசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று “நகரசபை செயலாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைப் போன்று தண்டனை வழங்கவுள்ளாராம், எனக்கு வேலை செய்ய பயமாக இருக்கிறது. அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதா என விசாரித்து சொல்லும்படி” கேட்டுள்ளார்.
இதன்பின் வேலைக்குச் செல்லாது வீட்டில் நின்றுள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்கள் கழித்து மீண்டும் பொலிஸ் நிலையம் சென்ற குறித்த உத்தியோகத்தர் தனது பெயரும் இருக்கா என பொலிசாரிடம் மீண்டும் வினவிய போது பொலிசார் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் விசாரணை மந்தகதியில் நடப்பதால் பொலிஸ் புலனாய்வுப் பிரிவான என்.ஐ.வி இந்த விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Average Rating