போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன; ஒருவர் கைது…!!
ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (17) கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மருந்துக்கடையில் போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் திடீர்ச் சோதனையை மேற்கெண்டனர்.
இதன்போது, ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். குறித்த மாத்திரைகள் இளவயதினருக்கு குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது.
இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியது என்றும் மேலும் நீண்டகாலப்போக்கில் நரம்பு மண்டலங்களைத் தாக்கி நிரந்தரமாக ஊனமுறச் செய்யக்கூடியது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக தாம் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினர் தெரிவித்தனர்.
Average Rating