கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் கடத்திய லாரி பறிமுதல்…!!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இதனால் நீர்வீழ்ச்சிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் லேசாக வரத்தொடங்கியது.
இதனை அறிந்த சமூக விரோதிகள் நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மீண்டும் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதனை தடுக்க மாவட்ட காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளிமலை வனச்சரகர் நாராயணன் தலைமையிலான வனத்துறையினர் கல்வராயன்மலை எருக்கம்பட்டு- சேத்தூர் பிரிவு சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை அவர்கள் வழிமறித்தனர். வனத்துறையினரை பார்த்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார்.
வனத்துறையினர் லாரியை சோதனை செய்த போது அதில் 30 கிலோ எடை கொண்ட 103 சாக்கு மூட்டைகளில் வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வனத்துறையினர் 3,090 கிலோ வெல்லத்தையும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி மது விலக்கு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீசார் நடத்திய விசாரணையில் கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக லாரியில் வெல்லத்தை கடத்தி வந்ததும், வனத்துறையினரை பார்த்தவுடன் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating