கொழிஞ்சாம்பாறை அருகே இளம்பெண் வீட்டில் தங்கியிருந்த வாலிபரை அடித்து கொன்ற உறவினர்கள்…!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கடை பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மகன் நசீர் உசேன் (வயது 41). இவரது வீடு அருகே இளம்பெண் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு நசீர்உசேன் சென்றார். இதே பகுதியில் வசித்து வந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்தனர். உடனே உறவினர்கள் சுமார் 10 பேர் விறகுக் கட்டைகளுடன் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த நசீர் உசேனை அவர்கள் வெளியே அழைத்தனர்.
ஆனால் நசீர் உசேன் வெளியே வர மறுத்து உள்ளேயே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இளம்பெண்ணுடன் இருந்த நசீர் உசேனை சரமாரியாக விறகுக்கட்டையால் தாக்கினர். வலி தாங்க முடியாமல் நசீர் உசேன் அலறினார்.
இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது நசீர் உசேனை கும்பல் தாக்குவதை பார்த்து திடுக்கிட்டனர். இதுபற்றி மங்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை கண்டதும் கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.
கும்பல் தாக்கியதில் காயத்துடன் உயிருக்கு போராடிய நசீர் உசேனை மீட்டு பெருதழ்மன்னா தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நசீர் உசேன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி மங்கடை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சித்திக் விசாரணை நடத்தினார். கொலையில் தொடர்புடைய உறவினர்கள் 7 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
இளம்பெண்ணுக்கும், நசீர் உசேனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக உறவினர்கள் சந்தேகப்பட்டு வந்தனர். நேற்று இளம்பெண் வீட்டுக்கு நசீர் உசேன் சென்றதால் ஆத்திரத்தில் உறவினர்கள் கொலை செய்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
Average Rating