12 ஆயிரம் இஸ்ரேல் வீரர்கள் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல்: ஏவுகணை வீசி தீவிரவாதிகள் பதிலடி
லெபனான் மீது இஸ்ரேல் 48 மணி நேர தாக்குதலை நிறுத்தி வைத்தது முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று மீண்டும் தாக்குதல் தொடங்கியது. பெய்ரூட் நகரத்தில் விமானம் மூலம் குண்டுகளை வீசினார்கள். அதே நேரத்தில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள தெற்கு லெபனானுக்குள் தரைப்படை நுழைந்து தாக்குதல் நடத்தியது.ஆனால் இஸ்ரேல் ராணுவம் எதிர்பார்த்தபடி உள்ளே தாராளமாக நுழைய முடியவில்லை. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் அரண் அமைத்து இஸ்ரேல் ராணுவத்தினரை எதிர்த்து தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக ராக்கெட்டுகளை வீசினார்கள்.
முதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 ஆயிரம் பேர் மட்டும் லெபனானுக்குள் புகுந்து தாக்கினார்கள். தீவிரவாதிகள் எதிர் தாக்குதல் பலமாக இருந்ததால் கூடுதலாக 8 ஆயிரம் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் தரை இறக்கப்பட்டனர்.
இவர்களையும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் எதிர்கொண்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. ராணுவத்துக்கு உதவியாக இஸ்ரேல் விமானங்களும் குண்டு வீசின.
லெபனானில் உள்ள பால்பெக் நகரம் தீவிரவாதிகளுக்கு முக்கிய கேந்திரமாக உள்ளது. அந்த நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்துவிட்டது. அவர்களுக்கும் தீவிரவாதி களுக்கும் இடையே தெரு வீதியில் நேருக்கு நேர் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் இருதரப்பிலும் பலர் பலியாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அரபு நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அல் ஜசீரா டெலிவிஷன் சானல், நேற்றைய சண்டையில் இஸ்ரேலுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு குண்டும், ராக்கெட்டுகளையும் வீசினார்கள். இஸ்ரேலின் உள் பகுதியில் 40 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இந்த தாக்குதல்களை நடத்தினர் என்று கூறியது.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 750 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.