தந்தை பெயர் குழப்பம்: கற்பழிப்பில் பிறந்த குழந்தையை பள்ளியில் சேர்க்க மறுப்பு…!!
மத்திய பிரதேச மாநிலம் திந்தோரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 2003-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மல்லேசி, ஓம்பிரகாஷ், பசந்த் தாஸ் ஆகிய 3 பேர் கூட்டாக கற்பழித்தனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் கற்பழிப்பின் காரணமாக அந்த பெண் கர்ப்பம் ஆனார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் உரிய ஆதாரம் இல்லை எனக்கூறி 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த பெண் தனது குழந்தையை வளர்த்து வந்தார். 5 வயது ஆனதும் ஆரம்ப பள்ளியில் சேர்த்தனர். அப்போது குழந்தையின் தந்தை பெயர் குறிப்பிடப்படும் இடத்தில் அவரை கற்பழித்த 3 பேரின் பெயரையும் பள்ளி தலைமை ஆசிரியர் அதில் சேர்த்து இருந்தார். இதனால் அப்போது எந்த பிரச்சனையும் எழவில்லை.
இப்போது அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படித்து முடித்து, 6-ம் வகுப்புக்கு அடுத்த பள்ளியில் சேர ஏற்பாடு நடந்தது. ஆனால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவனை சேர்க்க மறுத்து விட்டார். தந்தை பெயர் உள்ள இடத்தில் 3 பேருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அவர் மறுத்தார்.
இப்போது இந்த பிரச்சனை கல்வித்துறையிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட உதவி கலெக்டர் சென்குப்தா கூறும் போது இது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆரம்ப பள்ளியில் சேர்க்கும் போது தந்தை பெயரை குறிப்பிடாமல் இருந்து இருந்தால் பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. ஆனால் இப்போது தலைமை நீதிபதியிடம் ஒரு உத்தரவு பெற்று அதன் மூலம் சிறுவனை பள்ளியில் சேர்க்க முடியும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
Average Rating