தந்தையால் எரித்து கொல்லப்பட்ட தாயின் மரணத்துக்கு சமூக வலைத்தளம் மூலம் நீதி கேட்கும் மகள்கள்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள தேவிபுரா பகுதியை சேர்ந்த மனோஜ் பன்சால் என்பவர் தனது மனைவி அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதால் ஆத்திரமடைந்தார். அந்த ஆத்திரத்தின் விளைவாக தனது குடும்பத்தாரின் துணையுடன் ஆண் குழந்தையை பெற்றுத் தராத மனைவியை உயிருடன் எரித்துக் கொன்றார்.
இருமகள்களின் கண்ணெதிரே நடந்த இந்த படுகொலை தொடர்பாக மனோஜ் பன்சாலை கைது செய்த போலீசார், அவர் மீது சாதாரண குற்றப்பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் இருமகள்கள் தற்போது போர்கொடி தூக்கியுள்ளனர். 15 மற்றும் 11 வயதாகும் இந்த சிறுமியர் இதுதொடர்பாக, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு கடிதம் எழுதியும் தீர்வு காணப்படாததால் மனம் உடைந்தனர்.
அரசு இயந்திரத்தின் மந்தகதியான போக்கை கண்டு வெறுத்துப் போன இவர்கள் தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக தந்தை மற்றும் அவரது குடும்பத்தாரால் எரித்து கொல்லப்பட்ட தாயின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
சமூக வலைத்தளம் மூலமாக இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் சுறுசுறுப்பு காட்டிவரும் புலந்த்சஹர் மாவட்ட போலீசார், மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தற்போது தெரிவித்துள்ளனர்.
Average Rating