தமிழ் பணியாளர்கள் படுகொலை : ஐ.நா. கடும் கண்டனம்!
மூதூரில் ஃபிரான்ஸ் நாட்டின் பட்டினி ஒழிப்பு அமைப்பிற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது! புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் போர் நடந்த மூதூர் நகரத்தில் சண்டை ஓய்ந்த பிறகு நகருக்குள் ஆக்ஷன் சென்ட்டர் லா ஃபைம் (ஏ.சி.எஃப்.) எனும் பசி ஒழிப்பு நடவடிக்கை எனும் ஃபிரான்ஸ் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக பணியாற்றிவரும் 17 தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கோர வெறித் தாண்டவத்திற்கு பலியான தமிழர்களின் உடல்களை ஒப்படைக்குமாறு அந்த ஃபிரான்ஸ் அமைப்பு சிறிலங்க அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த படுகொலைக்கு காரணமானவர்களை நிச்சயம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் ஏ.சி.எஃப். கூறியுள்ளது.
தங்களது அமைப்பிற்காக பணியாற்றிய அவர்கள் அனைவரும் அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்திருந்ததாகவும், அது தெரிந்தும் அவர்கள் மீது இந்த கொலை வெறித் தாண்டவம் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வமைப்பின் தலைவர் டென்னிஸ் மெட்ஸ்கர் கூறியுள்ளார்.
தங்களுடைய 27 ஆண்டு கால சர்வதேசப் பணியில் இப்படிப்பட்ட படுகொலையை தாங்கள் சந்தித்ததில்லை என்று மெட்ஸ்கர் கூறியுள்ளார்.
இந்தப் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இதற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்குமாறு சிறிலங்க அரசை கேட்டுக் கொண்டுள்ளது.